Templesinindiainfo

Best Spiritual Website

Vadivudai Amman Akshara Pushpamalai Lyrics in Tamil

வடிவுடை அம்மன் அக்ஷர புஷ்பமாலை:

சென்னை மாநகரில் வடசென்னையில் அமைந்துள்ள ஊர் திருவொற்றியூர் எனும் திருத்தலமாகும். இத்திருத்தலத்தில் உறையும் இறைவி அருள்மிகு வடிவுடையம்மனின் மீது பாடல் எழுதக்கனவில் தோன்றியது. ஆகவே ‘ அ ‘ முதல் ‘ வ ‘ வரையிலான எழுத்துக்களை முதல் எழுத்தாகக் கொண்டு அக்ஷர புஷ்ப மாலை பாட முனைந்தேன். அம்மனின் அருட்பார்வையாலும், ஈசனின் அருளாலும் என்னால் இயன்றவரை எழுதி உள்ளேன். பிழைகள் இருப்பினும் ஈஸ்வரியை மனதில் நினைந்து அம்மனின் திருவடியில் சமர்ப்பித்து இதனைப் படிப்பவர்களுக்கு வேண்டுவன நல்க வேண்டுமென்று சிரம் தாழ்த்தி உமையம்மையை வேண்டுகின்றேன். குறைகளைக் களைய முன் வருவோரின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள விழைகிறேன்.

– சாந்தா ஸ்ரீநிவாசன்

கணபதி காப்பு Lyrics:

கொடியிடையுடையவள் கொழுமலரனையவள்
வடிவழகுடையவள் வடிவுடையம்மனின்
வடிவினை வருணித்து வரிகளில் பாடிட
கடிகணபதியே காத்து நீ யருள்வாய்

அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும்
அகிலாண்ட நாயகியே
அழுத பிள்ளைக்கு அமுதூட்டிய
அருளுடை அம்பிகையே
அறம்வளர்த்த நாயகி அபிராமவல்லி நீ
அங்கயர்க்கண்ணியும் நீ
அடியேன் உனைப்பணிந்தேன் ஒற்றியூர் வாழ்கின்ற
அழகு மிகு வடிவுடையம்மையே

ஆதியந்தமிலா ஆதிபராசக்தி நீ
ஆனந்தவல்லியும் நீ
ஆதிசங்கரர் அமைத்த அர்த்த மேருவினில்
ஆட்சி செய்பவள் நீயே
ஆறாத்துயரெல்லாம் ஆற்றி அருள்கின்ற
ஆதிசக்தி நீயே
ஆட்கொளம்மா எனை ஒற்றியூர் வாழ்கின்ற
அழகு மிகு வடிவுடியம்மையே

இந்திராக்ஷிநீ இமவான் மகளும் நீ
இந்து சீதளை நீயே
இந்த ஜன்மத்தில் இருவினை களைந்திடும்
இந்து மதியும் நீயே
இன்னல் இருள் அகற்றி இன்பம் நல்கிடும்
இச்சா சக்தி நீயே
இருபாதம் சரணடைந்தேன் ஒற்றியூர் வாழ்கின்ற
அழகு மிகு வடிவுடையம்மையே

ஈசரொடு பாகமாய் இணைந்திட்ட ஈஸ்வரியே
ஈரேழுலகுக்கும் அன்னை நீயே
ஈராறு கண்ணினனை ஈன்றெடுத்த தாயும்நீ
ஈடிணை அற்றவளும் நீயே
ஈனகுணம்உள்ளவரையும் ஈ எறும்பு மற்றவையையும்
ஈஸ்வரியே காத்திடம்மா
ஈண்டு உனை சரணடைந்தேன் ஒற்றியூர் வாழ்கின்ற
அழகு மிகு வடிவுடையம்மையே

உம்பரும் உய்யவே உறுதியுடன் போரிட்ட
உமையம்மையும் நீயே
உந்தன் புகழ் பாடிடவே ஒருக்காலும் உறங்காமல்
உன்மத்தன் ஆனேனம்மா
உன்னழகை வருணிக்க உபமானம் உண்டோ சொல்
உலகத்து நாயகியே
உனை நாடி சரணடைந்தேன் ஒற்றியூர் வாழ்கின்ற
அழகு மிகு வடிவுடையம்மையே

ஊனக்கண் உள்ளவர்க்கும் ஒளிக்கண்ணை கொடுத்திடம்மா
ஊழ்வினைகள் தீர்த்திடம்மா
ஊரெல்லாம் உன்பேரை உரக்கவே ஒலித்த்திடுவேன்
ஊஞ்சலில் ஆடிவாம்மா
ஊசிமுனையில் தவம் செய்யும் மாங்காட்டு காமாட்சி
ஊர்பயத்தை விரட்டிடம்மா
ஊன்றிடம்மா என் மனதில் ஒற்றியூர் வாழ்கின்ற
அழகு மிகு வடிவுடையம்மையே

Vadivudai Amman

எங்கும் நிறைந்திருந்து எங்களைக்காத்திடம்மா
எமபயம் நீக்கிடம்மா
எல்லையில்லா துயரமுறும் ஏழை எளியோரையும்
எழிலுடன் காத்திடம்மா
எண்ணிலா எதிரிகள் எங்கெங்கு வந்தாலும்
எல்லையைக்காத்திடம்மா
எனையாளும் ஈஸ்வரியே ஒற்றியூர் வாழ்கின்ற
அழகு மிகு வடிவுடையம்மையே

ஏகாந்தமானவளே ஏகாம்பரர் நாயகியே
ஏறுமயிலோன் அன்னை நீயே
ஏழுஸ்வரங்களின் இசையில் மயங்குகின்ற
ஏகாந்த வல்லி நீயே
ஏங்கிடும் எந்தனின் எண்ணிலா நிலைகளை
ஏட்டினில் எழுதினேனம்மா
ஏழை என்மீதிரங்கு ஒற்றியூர் வாழ்கின்ற
அழகு மிகு வடிவுடையம்மையே

ஐந்தொழில் புரிந்திடும் ஐயனின் தேவியே
ஐஸ்வர்யம் அளித்திடம்மா
ஐயாற்றில் உறைந்திடும் அறம் வளர்த்தநாயகி
ஐயங்கள் தீர்த்திடம்மா
ஐம்பத்தோர் பீடத்தில் அரசாட்சி செலுத்திடும்
ஐம் எனும் ஒலியினளே
ஐக்கியமானேன் நான் ஒற்றியூர் வாழ்கின்ற
அழகு மிகு வடிவுடையம்மையே

ஒன்றாகிப்பலவாகி ஒவ்வொன்றுகுள்ளேயும்
ஒளிர்கின்ற ஒளியும் நீயே
ஒட்டியாணம் ஒலிக்கின்ற தண்டை சலங்கையுடன்
ஒய்யாரமாய் வந்திடம்மா
ஒப்புமை இல்லாது ஒளிர்கின்ற ஓவியமே
ஒழுக்கத்தை அளித்திடம்மா
ஒருக்காலும் உனை மறவேன் ஒற்றியூர் வாழ்கின்ற
அழகு மிகு வடிவுடையம்மையே

ஓங்கார நாயகி ஒம்சக்தித்தாயும் நீ
ஒஜோவதியும் நீயே
ஓங்காரேச்வரரின் ஒளிர்மிகுநாயகி
ஓடோடி வந்திடம்மா
ஓசையாசை எனும் உலகியல் மாயை தனை
ஓட்டினுள் ஒடுக்கிடம்மா
ஓடியுனை சரணடைந்தேன் ஒற்றியூர் வாழ்கின்ற
அழகு மிகு வடிவுடையம்மையே

ஔஷதமும் நீ ஔபாஸநமும் நீ
சௌந்தர்ய நாயகியே
கெளரி சுந்தரி சங்கரி சாம்பவி
சௌபாக்கியம் தந்திடம்மா
பௌர்ணமி பூஜையில் பலன் பல அருளிடும்
கௌமாரியே எனக்கு
மௌனத்தை அளித்திடு ஒற்றியூர் வாழ்கின்ற
அழகு மிகு வடிவுடையம்மையே

கவின்மிகு நாயகி கண்ணனின் சோதரி
கண்ணினைக்காத்திடம்மா
கற்பகவல்லிநீ கண்கண்ட தெய்வம்நீ
கதம்பவனவாசினி நீ
கனக துர்க்கையே கன்யா குமரியே
கனிவுடன் வந்திடம்மா
களித்து எனை ஆதரி ஒற்றியூர் வாழ்கின்ற
அழகு மிகு வடிவுடையம்மையே

காஞ்சி காமாட்சி காசி விசாலாக்ஷி
காத்தே ரட்சிப்பாய்
காமேஸ்வரியே காதம்பரியே
காட்சியே தந்திடுவாய்
காந்திமதியே காளிகாம்பாளே
காலனை விரட்டிடுவாய்
காலடி பணிந்தேன் ஒற்றியூர் வாழ்கின்ற
அழகு மிகு வடிவுடையம்மையே

சங்கரி சாம்பவி சாரதா தேவிநீ
சகலமும் அளித்திடம்மா
சங்கடம் தீர்த்திடும் சாவித்திரி தேவியே
சடுதியில் வந்திடுவாய்
சண்ட முண்டரை சமரினில் அழித்திட்ட
சாமுண்டீஸ்வரியே
சரணடைந்தேன் நான் ஒற்றியூர் வாழ்கின்ற
அழகு மிகு வடிவுடையம்மையே

ஞாலம் போற்றிடும் ஞானஸ்வரூபியே
ஞானப்ரசுன்னாம்பிகையே
ஞானிகள் வலம் வரும் அண்ணாமலையில்
ஞானியாய் உறைபவளே
ஞானேந்திரியங்கள் நலமாய் இயங்கிட
ஞாயிறாய் வந்திடம்மா
ஞானத்தை வேண்டினேன் ஒற்றியூர் வாழ்கின்ற
அழகு மிகு வடிவுடையம்மையே

டம் டம் டம் என டமரு அசைத்திடும்
தாண்டவன் நாயகியே
டண் டண் டண் என தண்டை ஒலித்திட
தண்மதி நீ வருவாய்
டங்கார ஒலிக்கே நாட்டியமாடிடும்
நடன கலா மயிலே
தன்னடி பணிந்தேன் ஒற்றியூர் வாழ்கின்ற
அழகு மிகு வடிவுடையம்மையே

தக்ஷனின் புதல்வி தாக்ஷாயணி நீ
தர்மத்தைக்காத்திடுவாய்
தவளேஸ்வரி நீ தர்மசம்வர்த்தனி
தரிசனம் தந்திடுவாய்
தங்க ரேகையுடன் லிங்க ஸ்வரூபியே
தண்ணொளி கொண்டவளே
தரித்தேன் உன் குங்குமம் ஒற்றியூர் வாழ்கின்ற
அழகு மிகு வடிவுடையம்மையே

நஞ்சுண்டோனின் நலம் மிகு நாயகி
நன்மையே புரிந்திடுவாய்
நாவினில் வாக்கினில் நல்மொழி நல்கி
நற்கதி அளித்திடுவாய்
நானிலந்தனிலே தொடர்ந்திடும் ஊழ்வினை
நல்வினையாக்கிடுவாய்
நானுனைப்பிரியேன் ஒற்றியூர் வாழ்கின்ற
அழகு மிகு வடிவுடையம்மையே

பங்கயச்செல்வி பரிமளவல்லி நீ
பவளவாய்க்குமரியும் நீ
பண்டாசுரனை வதைத்த தேவியே
பயமதை அகற்றிடுவாய்
பனிமலை அரசி நீ பர்வதவர்த்தினி
பாரத்தைப் போக்கிடுவாய்
பதமலர் பணிந்தேன் ஒற்றியூர் வாழ்கின்ற
அழகு மிகு வடிவுடையம்மையே

மணமகன் சுந்தரர் மணமகள் சங்கிலி
மணந்தனை முடித்தவளே
மங்களநாயகி மரகதவல்லி நீ
மாங்கல்யம் தந்திடுவாய்
மகிழடி சேவையில் மனம் மிக மகிழ்ந்த்திட்டே
மக்களைக்காத்திடுவாய்
மறந்திடேன் உந்தனை ஒற்றியூர் வாழ்கின்ற
அழகு மிகு வடிவுடையம்மையே

யானை முகத்தவன் அன்னை பராசக்தி
யாதுமாகி நின்றாய்
யானை பூஜித்த தலமதில் உறைந்திடும்
யோக நாயகியே
யாகம் பல புரிந்த தேவரைக்காத்திட்ட
யக்னேஸ்வரி நீயே
யானுனைப்பிரியேன் ஒற்றியூர் வாழ்கின்ற
அழகு மிகு வடிவுடையம்மையே

ரஞ்சனி நிரஞ்சனி மஞ்சுள பாஷிணி
ராஜராஜேஸ்வரி நீ
ரக்த பீஜனின் ரத்தத்தை உறிஞ்சிய
ராஜமாகாளியும் நீ
ரத்னம் முத்துக்கள் பவளம் பதித்திட்ட
ரதத்தினில் வந்திடுவாய்
ரசித்தேன் உன்னழகை ஒற்றியூர் வாழ்கின்ற
அழகு மிகு வடிவுடையம்மையே

லலிதா தேவியே லாவண்ய ரூபியே
லலித கலாநிலையே
லட்சுமி பதியாம் நாராயணனின்
லயம்மிகு சோதரியே
லங்கேஸ்வரனும் பூஜித்தவராம்
லலாடாக்ஷர் சிவையே
லயித்தேன் உன்னிடம் ஒற்றியூர் வாழ்கின்ற
அழகு மிகு வடிவுடையம்மையே

வள்ளி மணாளர்க்கு வேல் தந்த அன்னையே
வரமதை அளித்திடுவாய்
வல்வினை வந்தெமை வாட்டிடும் போது
வலிமையைத்தந்திடுவாய்
வல்லார் பொல்லார் வஞ்சனை மாற்றிட
வல்லமை தந்திடுவாய்
வந்துனை அடைந்தேன் ஒற்றியூர் வாழ்கின்ற
அழகு மிகு வடிவுடையம்மையே

Vadivudai Amman Akshara Pushpamalai Lyrics in Tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top